Pages

Banner 468

Subscribe
Saturday, August 9, 2008

தலித் அடிமைகள்... தலையிடாத அரசு!

1 comments
 

கொளத்தூர் ஒன்றியத்தில் அதிர்ச்சி சர்வே...அந்தக் கிணற்றருகில் விளையாடிய சின்னக் குழந்தை. திடீரென்று கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அருகில் இருந்த பெண்களின் அலறல் கேட்டு, பக்கத்துத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டி ருந்த ஒரு பெரிய பையன், கிணற்றுக்கு ஓடி வந்திருக்கிறான். கிணற்றுக்குள் குதித்துக் குழந்தையைக் காப்பாற்ற அவன் தயாரான போது, அவனைத் தடுத்து நிறுத்திவிட்டனர் அந்தப் பெண்கள். எல்லோர் கண் எதிரிலும் அந்தக் குழந்தை உயிருக்குப் போராடி இறந்துவிட்டது...

இது கதையல்ல; நிஜம்! சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்துக்குள் வரும் கருங்கல்லூர் என்ற கிராமத்தில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற விடாமல், பையனைத் தடுத்தனர்? ஏனென்றால், அவன் ஒரு தலித்! கீழ்சாதிக்காரன் தொட்டால் தீட்டு என்று அவனைத் தடுத்து விட்டார்களாம்!

மனதை சில்லிட வைக்கும் இந்த சம்பவத்தை நம்மிடம் சொன்னவர், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மேட்டூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியச் செயலாளரு மான மேவை.சண்முகராஜா. அவரைச் சந்தித்தோம்.

''தீண்டாமைங்குறதே இல்லைனு எல்லா அரசாங்கமும் சொல்றது எந்த அளவுக்கு உண்மைங்கறத பாக்குறதுக்காக இந்த சர்வேயை எடுத்தோம். ஒரு குழுவுக்கு ஆறு பேருன்னு மொத்தம் இருபத்தஞ்சி குழுக்களா சர்வே டீமை பிரிச்சோம். இந்தக் குழுவுல அரசு ஊழியர்கள், வக்கீல்கள், பட்டதாரி இளைஞர்கள்னு எல்லோரையும் கொண்டு வந்தோம். 35 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளை ரெடி பண்ணி, கொளத்தூர் ஒன்றியத்துல இருக்கிற 54 தலித் கிராமங்களுக்கு அவங்க போனாங்க. அதுல பத்தாயிரம் பேரை சந்திச்சாங்க.

பெரியதண்டா, நீதிபுரம், ஊர்நத்தம், ஒட்டன்காடு, கோவிந்தபாடி, சி.எஸ்.புரம் ஆகிய ஊர்களில் தலித் மக்களுக்கு சலூன் கடையில முடி வெட்டுறது இல்ல. என்ன காரணம்னு விசாரிச்சா தலித் மக்கள் உட்கார்ந்து முடி வெட்டிக்கிட்டுப் போனா அந்த நாற்காலியில மத்த சாதிக்காரங்க உட்கார மாட்டாங்களாம். அதனால இன்னைக்கு வரைக்குமே அந்தக் கட்டுப்பாடு இருந்துகிட்டேதான் இருக்கு. பா.ம.க. மாநிலத் தலைவரான ஜி.கே.மணியோட சொந்த ஊரான கோவிந்தபாடியிலும் இதே கொடுமைதான்.

இந்த ஒன்றியத்துல மொத்தம் 127 டீக்கடைகள் இருக்கு. அதுல 32 டீக்கடையில இன்னும் இரட்டை டம்ளர் முறை இருக்கு. சத்யா நகர் ஏரியாவுல ஹோட்டல்களில் தலித்கள் இன்னமும் கீழேதான் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்காங்க. இந்திரா நகர்ல உள்ள கடைகளில் கொட்டாங்குச்சியிலதான் அவங்களுக்கு டீ கொடுக்கிறாங்க.

ஊர்நத்தம்ங்குற கிராமத்துல வெளியூரைச் சேர்ந்த தலித் ஒருத்தரு தெரியாம அந்த ஊருல இருக்கிற பிள்ளையாருக்குத் தண்ணி ஊத்திட்டு சாமிக் கும்பிட்டிருக்காரு. இந்த விஷயம் தெரிஞ்சி, பஞ்சாயத்தைக் கூட்டி அவருக்கு நூறு ரூவா குத்தம் போட்டிருக்காங்க. ஏரிக்காடுங்குற கிராமத்துல மீனாங்குற பொண்ணு பொது பைப்ல தண்ணிப்பிடிக்க போயிருக்கு. அப்போ பைப்ல வச்சிருந்த குடத்துல தண்ணி ரொம்பி கீழே போயிட்டு இருந்திருக்கு. அந்தக் குடத்தை நகர்த்தி வச்சிட்டு, இந்தப் பொண்ணு தண்ணி பிடிச்சிருக்கு. மேல் சாதிக்காரங்க குடத்தை கீழ் சாதிக்காரப் பொண்ணு எப்படி தொடலாம்னு அந்தக் குடத்தைப் போட்டு உடைச்சி தீ வச்சதோடு இல்லாம, குடத்தைத் தொட்ட மீனாவுக்கு நூறு ரூவா தண்டமும் விதிச்சிருக்காங்க!

இருபது கோயில்கள்ல தலித் மக்களை இப்பவும் உள்ளே விடுறது இல்ல. தலித் பையன்கூட வேற சாதி பொண்ணு லவ் பண்ணி ஓடி போயிடுச்சின்னு அந்தப் பொண்ணைப் பிடிச்சிக் கொண்டுவந்து, பொண்ணோட நாக்குல பிளஸ் குறி போல சூடு போட்டுத் தீட்டுக் கழிச்சிருக்காங்க. இது இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல இருந்துகிட்டுதான் இருக்கு. தலித் மக்களைப் பண்ணை அடிமைகளாக வச்சிக்கிட்டு வேலை வாங்கிட்டு இருக்கிற பழக்கம் பல கிராமங்கள்ல இன்னும் இருக்கு. அவுங்களுக்கு வருசத்துக்கே சம்பளமா நாலாயிரம்தான் கொடுக்கிறாங்க. ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டா சம்பளத்துல நூறு ரூவா புடிச்சிக்குவாங்க. நாங்க இப்படி ஒரு சர்வே எடுக்கிற விஷயம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிஞ்சி போச்சி. உடனே ஒவ்வொரு கிராமத்துக்கா அதிகாரிகள் போய் எதையும் வெளியே சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டும் வந்திருக்காங்க.

தீண்டாமை இல்லைனு சொல்ற அதிகாரி யாரா இருந்தாலும் என்கூட நேரா வரச் சொல்லுங்க. நானே ஸ்பாட்டுக்குக் கூட் டிட்டுப் போறேன். இந்த சர்வேயோட மொத்த ரிப்போர்ட் டையும் தொகுத்து மாவட்ட ஆட்சியர் கிட்ட கொடுக்கப் போறோம். அவரு நடவடிக்கை எடுக்கலன்னா, அதுக்கு மேலதான் எங்க கச்சேரியே இருக்கு. நாங்க சொல்ற கிராமங்களில் உள்ள தலித் மக்கள் மீது நடக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கிற வரைக்கும் எங்க போராட்டம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கும்.

கொளத்தூர் ஒன்றியத்துல தொடங்கி இருக்கும் இந்த சர்வேயை, அடுத்த கட்டமா சேலம் மாவட்டம் முழுக்க பண்ண போறோம். எந்த ஊருல நாங்க சர்வே பண்ண போறோம்னு முன்கூட்டியே தெரிஞ்சிட்டா அதிகாரிகளும், மத்த சாதிக்காரங்களும் போய் தலித்களை மிரட்டி வச்சிடுறாங்க. அதனால நாங்க எங்கே சர்வே எடுக்கிறோம், எப்படி எடுக்கிறோம்ங்குறதை ரொம்பவும் ரகசியமா வச்சிக்குவோம்'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து முடித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தக் கொடுமைகளை வெளியே சொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள், இந்திய கம்னியூனிஸ்ட் கட்சியினர்.சேலம் மாவட்ட கலெக்டர் மதிவாணனிடம் இது தொடர்பாகப் பேசினோம். நாம் சொன்ன விஷயங் களைக் கேட்டுத் திடுக்கிட்டவர், ''கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்னும் எனக்கு எந்த விவரமும் சொல்லலை. அப்படி அவுங்க ரிப்போர்ட் கொடுத்ததும் உடனடியா அவுங்க சொல்ற இடங்களுக்கெல்லாம் அதிகாரி களை அனுப்பி, விசாரிக்கச் சொல்றேன். தீண்டாமைக் கொடுமை இருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்படும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்றார்.எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் தீண்டாமைக்கு மட்டும் மரணமே இல்லை போலிருக்கிறது!

நன்றி:கே.ராஜாதிருவேங்கடம், ஜூ.வி - Issue Date: 08-04-07

One Response so far.

  1. payal says:

    Good working! Really nice content, Thanks for sharing this. But I want to share the RRB Admit card 2018 details.
    RRB Secunderabad Admit Card

Leave a Reply